Sunday, July 13, 2008

ஆக்கள் பாதுகாப்பு (கோசாலை)...



அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய புதுச்சேரி வாழ் மக்கள் பிரதிநிதிகளே!

இக்கடிதம் எழுதும் தி.ப. சாந்தசீலனாகிய நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டே அரசியல் கட்சியிலிருந்து விலகித் தன்னைக் கட்சி சாராப் பொது மனிதராக அறிவித்தார் என்பதை நன்கு அறிந்து கொண்டவன்.


மேலும் மகாத்மா காந்திஅடிகள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ல் நடந்த தன்னுரிமைத் திருநாள் விழாக்களில் கலந்து கொள்ளாதவர். அவருடைய கருத்துக்கள் யாவும் உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் கட்சியையும் சார்ந்தது அல்ல என்பதை இதைப் படிக்கும் அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாய் பேரன்போடு வேண்டுகிறேன்.


இந்த மடலை எழுதும் யாமும், பசுக்கள் வயதான பிறகு அதாவது பால் கரக்கும் தன்மையை இழந்த பிறகு ஆரணி வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உள்ள வேலூர் நகரில், வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ள கோசாலையில் எமது பசுக்களைச் சேர்ப்பது வழக்கம்.


இந்த மடல் எந்த ஒரு விளம்பரச் சாதனங்களுக்கும் அனுப்பப்படுவது அல்ல. ஆனால் இதற்கு எழுத்து மூலமான பதிலை யாம் எதிர்பார்க்கிறோம்.பல்வேறு சிரமமான சூழ்நிலையிலும், நாட்டை சிறப்புடன் ஆள நினைக்கும் மக்கள் பிரதிநிதிகளாகிய தங்களுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காந்தியடிகளின் சிந்தனைச் சார்ந்த எமது கோசாலையைப் பற்றியக் கருத்துக்கள் பின்வருமாறு,கோசாலைப் பற்றியது :


1. கோசாலை என்பதன் பொருள் :- எருதுகளும், பசுக்களும் பால் கொடுக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் இழந்த பிறகு அதை ஓரிடத்தில் வைத்து பராமரித்து, அதாவது அதற்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை அதைச் சிறந்த முறையில் அடக்கம் செய்யும் வரை பராமரிக்கும் இடத்திற்கு கோசாலை என்று பெயர்.பசு என்பது பழங்காலத்தில் "ஆக்கள்"என அழைக்கப்பட்டன.இவற்றைப் பாதுகாப்பதைப் பழந்தமிழர் உயர்வாக நினைத்தனர்.'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' எனபது பழம் புறநானூற்று வரி.


2. கால்நடைகளுக்கான செலவு அதிகமாக இருக்கிறது. ஆனால் அவைகளால் கிடைக்கும் பலனுக்கும், அவைகளுக்காக நாம் செய்யும் செலவிற்கும், எவ்வித சம்மந்தமும் இல்லை. அதாவது அவைகளால் கிடைக்கும் பலனை விட நாம் செய்யும் செலவு மிகக் குறைவு என்பது பொருள்படும் (காந்தியடிகள் கிராம சுயராஜ்யம் பக்கம் 165.)


3. ஜீவகாருண்யம் உள்ளவர்கள் (உயிர்களிடத்தில் அன்பு) என்ன செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிந்ததே. அதாவது நாம் கால்நடைகளின் உயிர்களைப் பாதுகாப்பதுடன் அவைகள் நமக்கு சுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டு முயற்சியே இதில் பெருமளவு நமக்கு உதவமுடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். (கிராம சுயராஜ்ஜியம் காந்தியடிகள் பக் 165.)


4. கால்நடை பராமரிப்பு வி­யத்தில் தனிப்பட்ட முயற்சியானது சுயநலத்திற்கும், மிருகத்தனமான போக்கிற்கும் இடமளிக்கிறது. ஆனால் கூட்டு முயற்சியோ (மக்க¼ளா (அ) அரசாங்கமோ செய்வது) இந்த இரண்டையும் பூரணமாக ஒழிக்கவிட்டாலும் (சுய நலத்தையும் மிருகத்தனமான போக்கையும்) குறைக்கவாவது செய்யலாம். (காந்தியடிகளின்.கிராம சுயராஜ்ஜியம் பக். 167.) இவ்வாறெல்லாம் காந்தியடிகள் கால்நடை பராமரிப்பு பற்றி கூறியுள்ளார். இரத்தம் சிந்திச்சண்டை செய்து ஓய்ந்த உலகத்திற்கு சமாதானம் மற்றும் நல்லெண்ணச் செய்தியை இந்தியாவால் மட்டுமே கூறமுடியும் என்று காந்தியடிகள் கூறினார்.


ஆகவே கோசாலை அமைப்பது சப்தமில்லாத ஒரு அமைதிப் புரட்சியை நாட்டில் ஏற்படுத்திவிடும். ஆகவே கோசாலை அமைக்க அரசு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கருத்துகள் பின்வருமாறு:


1. நம் தமிழர்கள் உயிர்களிடத்தில் கருணை, அன்பு காட்டுவதில் உலகத்தில் உள்ள மக்களுக்கு இளைத்தவர்கள் அல்லர். ஏனென்றால் இன்னும் நமது கிராமப்புறங்களில் பலன் கொடுக்காத கால்நடைகளைக் கூட அன்றாடம் மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போய் மாலையில் அவற்றை வீட்டுக்கு அழைத்து வந்து எல்லையற்ற அன்பை அந்த கால்நடைகளின் பேரில் செலுத்தி அன்பைப் பொழியும் இந்த மக்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு. இப்படிப்பட்ட மக்களைத் தான் காந்தியடிகளும் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உதாரணமானவர்கள் என்று கூறினார்.


2. இம்மடலை சமர்பிக்கும் தி.ப.சாந்தசீலன் ஆகிய அடியேனுக்கும் வறுமை நிலையிலும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் இம்மக்கள் தான் கடவுளாகக் காட்சியளிக்கிறார்கள்.


3. பலன் கொடுக்காத மாடுகளை வைத்துப் பராமரிப்பவர்களின் கணக்கை இரகசியமாக எடுத்து அவர்களுக்கு அதிகப்படியான உதவித் தொகை, பரிசுத்தொகை, ஊக்கத்தொகை மாதந்தோறும் உடனடியாக வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


4. தமிழ் நாட்டில் மூன்று சித்த மருத்துவக்கல்லூரிகள் அரசாங்கத்தால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தச் சித்த மருத்துவக் கல்லூரிகளை அணுகி சித்த மருத்துவத்தில் காராம் பசுவின் பால் உயர்வாகக் கூறப்படுகிறது. வெண்மைப் பசுவின் பால் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது, இரவில் சுரந்து காலையில் கறக்கும் பால் உயர்வாகக் கூறப்பட்டுகிறது. மேலும் கோரோஜனம், நெய், தயிர், பால், மோர், இவற்றின் அருமைப்பெருமைகளைப் பொது மக்கள் நடுவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதனால் பால் பொருட்களின் நுகர்வுத் தன்மை அதிகப்படும். நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்த பால் பொருட்களின் நுட்பமான விசயங்கள் மக்களுக்கு புரியவரும்.


5. 100 ஏக்கருக்குக் குறையாமல் உள்ள பகுதியில் கோசாலை அமைக்கப்பட வேண்டும். கோசாலையில் கொண்டு வந்து விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் விரும்பினால் மாடுகளை அடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். இதர கால்நடைகள் இறக்கும் போது விஞ்ஞானமுறைப்படி, தோல், எலும்பு, மற்ற பாகங்களை மீண்டும் உபயோகமான பொருட்களாக மாற்ற மிகச்சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த கால்நடைவல்லுனர்களைக் கொண்டு இந்தக் கோசாலை நிர்வகிக்கப் படவேண்டும்.


6. பொதுவாகவே பசுந்தீவனம் என்பது காணாத பொருளாகிவிட்டது. நகர்ப்புறக் கழிவுநீரைக் கொண்டு பசுந்தீவனம் வளர்க்கும் முறை மிகச்சிறப்பாக புதுச்சேரி மாநிலத்தில் விமானதளம் அருகில் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ஆகவே புதுச்சேரி மற்ற பகுதிகளிலும் இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகப்படியான பசுந்தீவனம் உற்பத்திச் செய்யப்பட்டு மிக அதிக அளவில் கால்நடைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


இப்படிப்பட்ட பசுந்தீவனங்கள் நம் மரபு வழியாக இருப்பது முக்கியம் . இவற்றை நம்மால் உருவாக்கப்படும் இயற்கை காடுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். அதாவது புல்லின் வகைகள் அருகம் புல்வகைகள் அம்மான் பச்சரிசி வகைகள் இன்னும் எண்ணற்ற விலங்கினங்கள் உண்ணும் தாவர இனங்களையே மரபு வழி பசுந்தீவனம் எனப்படும்.


7. நகர்புறத்தில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் பொதுவாக கிராமப்புறங்களில் உழைக்கப் பயன்படுத்தும் மாடுகள் வயது முதிர்ந்து தள்ளாத நிலைமையில் இருந்தால் அவற்றை உடனடியாக கைப்பற்றி கோசாலையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட கோசாலைகள் தமிழ் நாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் பழந்தமிழ் நூல்களில் உண்டு. கோசாலைகள் அமைப்பதன் மூலம் நமது நாட்டின் பெருமை உலக அளவில் உயரும்.


மிக மோசமான சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு ஆட்சி செய்பவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் மன நிறைவு உண்டாகும் மேலும், ஓங்கோல், மணப்பாறை, மேற்கத்தியான், காங்கேயம், தார்பக்கார், சிந்தி, போன்ற மிகச் சிறந்த இனங்கள் நமக்கு அழியாமல் தொடர்ந்து கிடைக்கும். தற்போது ஏறு தழுவுதல் விளையாட்டில் மட்டுமே இது போன்ற இனங்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. (ஜல்லிக்கட்டு) இந்த விளையாட்டை நம் புதுச்சேரி பகுதிகளிலும் ஊக்கப்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்வதானது இப்படிப்பட்ட இனங்கள் தொடர்ந்து அழியாமல் வளர்வதற்கு ஊக்கமாய் அமையும்.


கோசாலை அமைப்பதானது வேளாண்மைக்கு மிக மிக உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. ஆகவே இந்த மடலில் உள்ள காரியங்களை நிறைவேற்ற வேண்டுமாய் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


எழுத்து மூலமான பதில் அளித்தாலும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எம்முடைய எந்தச் செய்திகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்பப்படுவதில்லை. அதிக அதிகாரம் படைத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே இது அனுப்பப்படுகிறது. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுப்புவது, பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் ஒன்றே என்று யாம் கருதுகிறோம்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இப்படிப்பட்ட கடிதங்களால் கருத்து வேறுபாடு அதிகமாகும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அதிகாரப் பகிர்வில் ஒரு சுமூகமான உறவு ஏற்பட்டு இரண்டு இயக்கங்களுக்கும் நல்ல சுமூகமாக உறவு ஏற்படும் போது இது போன்ற கடிதங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் யாம் அனுப்ப முயல்வோம்.


25 வருடங்கள் தன்னலமற்ற தொண்டின் வெளிப்பாடு பல தமிழ் அறிஞர்களின் அறிவுச்சாரம் இக்கடிதத்தில் உள்ளதைத் தாங்கள் அருள் கூர்ந்து தெரிந்து கொள்ளவும். தங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இதிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய முயற்சி செய்தால் நாடும் தாங்களும் நல்வாழ்வு வாழ்வது உறுதி.

1 மறுமொழிகள்:

'))')) said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in